புத்தளம் - தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் 11-இல் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, சக மாணவன் ஒருவனால் காகிதக் கத்தியால் தாக்கப்பட்டு மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை நேற்று (06.04.2026) மதிய வேளையில் பாடசாலை வளாகத்தினுள் வைத்து இடம்பெற்றுள்ளது.
இதில் தங்கொட்டுவ – மாவத்தகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய கே. கவிந்து நிம்சர என்ற மாணவன் காயமடைந்து சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவனும், தாக்குதலை நடத்திய மாணவனும் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதுடன் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கையை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.