அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்துகளை விநியோகம் செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து.!

அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்து விநியோகங்களை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச் செய்யப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முழுநாடும் ஒன்றாக என்னும் தேசிய போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இன்று (27.04.2026)நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மருந்தகங்கள் ஊடாக போதைப்பொருளுக்கு சமனான மருந்துகளை மாணவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதார அலுவல்கள் திணைக்களம் ஊடாக மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் விழிப்புணர்வு அறிவுறுத்தல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் இந்த செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பணியக உத்தியோகத்தர் டினேஸ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் அச்சுதன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மருத்துவரின் சிபாரிசுடன் வருவோருக்கு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சிபார்சு செய்துள்ள வைத்தியர் அதற்கு தகுதியுடையவரா என்பது கவனிக்கப்பட வேண்டும் என்பதுடன் சிபார்சு செய்துள்ள வைத்தியர் உண்மையான வைத்தியரா என்பது தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மருந்துகள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டன.


வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் மருந்துகளின் துஷ்பிரயோகங்களை தடுப்போம், முழுநாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஆகியவை அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.


இதன்போது போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சுகாதார பணிப்பாளர்,
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு மருந்தகங்களிலும், தனியார் மருந்தகங்களிலும் சரியான மருந்துகளை எவ்வாறு வழங்குவது மற்றும் வைத்தியர்களின் பரிந்துரையின்படிதான் அது வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அதற்குரிய சரியான பெயர், சரியான அளவுகளில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான வைத்தியரின் கையெழுத்து தானா? அந்த வைத்தியர் அந்த பரிந்துரையை செய்வதற்கு தகுதியுடையவரா என்பது சம்பந்தமாக விழிப்புணர்வு தனியார் மருந்தகங்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.


அதே நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி, இலங்கையிலும் சரி போதைப்பொருட்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற இந்த தருணத்தில், அது கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மருந்தகங்களில் இருக்கின்ற சில போதை தரக்கூடிய சில மருந்துகள், வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் போதையை ஏற்படுத்துவதற்காக சிலரால் தவறாக பயன்படுத்தப்படும் ஒரு அபாய நிலைமை காணப்படுகிறது.


ஆகவே ஒரு பக்கம் போதைப்பொருள் பாவனையை தடுக்கின்ற இறுக்கமான நடைமுறைகள் காணப்படுகின்ற இந்த நேரத்தில், அதனை பெற்றுக்கொள்ளாதவர்கள் அதற்கு மாற்றாக தனியார் மருந்தகங்களில் உள்ள சில மருந்துகளை வைத்தியர்களின் பரிந்துரை இல்லாமல் அல்லது வைத்தியர்களின் பரிந்துரையை தங்களால் திருத்தி அல்லது தகுதியற்ற சில போலி மருத்துவர்களின் பரிந்துரை சீட்டுகளை பாவித்து இந்த மருந்துகளை பெற்றுக்கொள்ளும் அபாயம் மிகப்பாரியதாக காணப்படுகின்றபடியால், அது சம்பந்தமான விழிப்புணர்வை நாங்கள் செய்து வருகின்றோம்.


இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், இதன் மூலமாக போதைப்பொருள் பாவனைகளை ஊக்குவிக்கிற சில கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு எங்களுடைய பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் இதற்கு பொறுப்பாக இருக்கின்ற எங்களுடைய பிராந்திய பொறுப்பதிகாரி அவர்கள், அதேபோல மட்டக்களப்பு மாநகர சுகாதார அதிகாரி அவர்கள், அவர்களுடைய அணியினர் சேர்ந்து 21 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை, மாணவர்களை தவறான வழியில் போதைப்பொருளுடன் கலந்து பாவித்து தவறாக வழிநடத்துபவர்களை தடை செய்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றோம்.


மாநகர சபையும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் சிகரெட் விற்பனையற்ற பிரதேசமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏறாவூரிலும் அதேபோல ஏறாவூர் நகரசபை ஏறாவூர் பிரதேச செயலகம் சேர்ந்து மிகச்சிறப்பாக அந்த சிகரெட் அற்ற ஒரு வலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல மட்டக்களப்பு நகரப் பகுதியிலும் உருவாக்குகின்ற வகையில் நாங்கள் மாநகர சபையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்படுத்தி வருகின்றோம். நிச்சயமாக அது எவருக்குமே சிகரெட் வழங்கக்கூடாது என்பதொரு கருத்தை நாங்கள் மாநகர சபையோடு சேர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.


அதே வேளை 21 வயதிற்குட்பட்ட பிள்ளைகளை தவறான வழியில் திருப்புகின்ற கடைக்காரர்களை அடையாளம் காண்பதும், அவர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்திய சுகாதார அதிகாரிகள் அல்லது பிராந்திய சுகாதார பணிமனைக்கு அறியத்தந்து அதன் மூலமாக எங்களுடைய சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை பொதுமக்களிடம் இருந்தும் நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.


“போதைப்பொருள் பாவனைகளை ஒழிக்கின்ற வினைத்திறனாக இந்த அரசாங்கம் ஒழித்துக் கொண்டு வருகின்ற காலகட்டத்தில், தனியார் மருந்தகங்களில் இந்த போதைப்பொருள் பாவிப்பவர்கள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்கின்ற அந்த முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் நாங்கள் இது ஒரு முதற்கட்டமாக கடந்த வாரம் எல்லா தனியார் மருந்தகங்களோடும் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி இருந்தோம். எல்லா தனியார் மருந்தகங்களும் மிகப்பாரிய ஒத்துழைப்பை தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். அவர்களுடைய உறுதியை எங்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள். அதே நேரத்தில் அவர்கள் இந்த விழிப்புணர்வையும் விழிப்புணர்வு மூலமாக அவர்கள் மிகவும் கட்டுப்பாடாக, மிகவும் சரியான முறையில் வைத்தியர்களோடு தொடர்பு ஏற்படுத்தி, சரியான பரிந்துரை சீட்டு இனி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.


பரிந்துரைகளில் பிழையாக பரிந்துரைப்பவர் அல்லது சில மருந்துகள் வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்படலாம், சில மருந்துகள் வைத்தியர் பரிந்துரைக்கலாம், சில மருந்துகளை ஆயுர்வேத வைத்தியர்கள் சில ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது நடைமுறையில் கொண்டு வராத விடயம். இப்படி பல பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை எல்லாவற்றையும் சரியாக கைக் கொள்ளும் இடத்து நாங்கள் பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு நாங்கள் ஒரு நல்ல எதிர்காலத்தை, போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்கலாம்.
புதியது பழையவை