மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டிய சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்த சம்பவ இடத்தில் புலிகளின் ஆயுதத்தை தேடி நீதிமன்ற அனுமதி பெற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை(13.04.2026) தோண்டும் நடவடிக்கை 8 மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காததால் தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
கடந்த மார்ச் 31 ம் திகதி இரவு மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் குழு ஒன்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த வீட்டின் உரிமையாளரான முதியவரான பெண் ,மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மற்றும் மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட, பொன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 8 பேருடன் பொலன்னறுவையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேரை கைது செய்ததுடன், பூஜை பொருட்களை மீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தால் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளையடுத்து அங்கு புலிகளின் ஆயுதம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் அதை தோண்டுவதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். யறூஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை (13) மாவட்ட தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருக்கும் வீட்டின் உரிமையாளரான முதியவரான பெண் அழைத்துவரப்பட்டு கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தை தோண்டும் நடவடிக்கை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு தேடும் நடவடிக்கை மாலை 5 மணி வரை சுமார் 8 மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காததால் தோண்டும் நடவடிக்கையை நிறுத்தி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.