மட்டக்களப்பு செங்கலடியில் பாரம்பரிய ஆயுர்வேத ஹெல்த்தி உற்பத்தி நிறுவனம் திறப்பு!

ஆரோக்கியம் மற்றும் இயற்கை முறையில், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய உலர் உணவு வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், புதிய பாரம்பரிய ஆயுர்வேத ஹெல்த்தி உற்பத்திகள் தயாரிப்பு நிறுவனமொன்று மட்டக்களப்பு செங்கலடி ஆண்டார்குளம் பிரதேசத்தில் நேற்று (24.05.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வந்தாறுமூலை மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் வைத்திய அதிகாரி திருமதி நிரோஜா சிவகுமார் தலைமையில் இந்த இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு, ஏறாவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி வானதி கிரிதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய நிறுவனத்தை திறந்து வைத்தார்.

இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் பாரம்பரிய உணவுகளின் தேவை அதிகரித்துள்ளது. வணிக நோக்கத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆயுர்வேத ஹெல்த்தி உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வந்தாறுமூலை மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் வைத்திய அதிகாரி திருமதி நிரோஜா சிவகுமார் தெரிவித்தார்.

இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உள்ளூர் மக்களுக்குத் தரமான ஆரோக்கிய உணவுப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இயற்கை மற்றும் பாரம்பரிய மூலிகைகள், தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உலர் உணவு வகைகளை எவ்வித இரசாயனக் கலவையுமின்றி, முற்றிலும் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் சிறியோர் முதல் பெரியோர்கள் வரை இதை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள், சுகாதாரப் பிரிவினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதியது பழையவை