பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

​பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று(08.06.2026) காலை ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

​கடலுக்கு அடியில் நில அதிர்வு
​இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 முதல் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க மற்றும் ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.


​நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாக ஜெனரல் சாண்டோஸ் (General Santos) நகரிலுள்ள பல வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

சரங்கானி மாகாணத்தின் அலபெல் (Alabel) நகர பொலிஸ் தலைமை அலுவலகக் கட்டிடத்திலும் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

​"நாங்கள் எங்கள் வாழ்நாளில் அனுபவித்த மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான். கொடியேற்ற நிகழ்வின் போது திடீரென நிலம் அதிரத் தொடங்கியதால் மக்கள் நிலைதடுமாறி ஓடினர், நடுக்கத்தின் அதிர்ச்சியில் சிலர் மயக்கமடைந்தனர்"

என அலபெல் நகர பொலிஸ் அதிகாரி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

​பிலிப்பைன்ஸ் - இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை
​நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஆகியன பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கு அவசர சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன.
புதியது பழையவை