மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (19.06.2026) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாவியை ஒட்டிய பகுதியில், மரம் ஒன்றின் கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

​இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். 

எனினும், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​தற்போது மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

​பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை.!

உயிரிழந்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தாலோ அல்லது அவரை அடையாளம் காண முடிந்தாலோ, உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை