மட்டக்களப்பு கோவில் போரதீவில் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

​மட்டக்களப்பு மாவட்டம்
போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோவில் போரதீவு மத்திய வீதியின் 04ஆம் குறுக்கு வீதியை கொங்கிறிட் வீதியாக புனரமைக்கும் பணிகள் நேற்று (18.06.2026) ஆம் திகதி  அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் (PSDG) கீழ், 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் கோவில் போரதீவு வட்டார உறுப்பினர் ம.கோபிநாத் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய உபதவிசாளர் த.கயசீலன், மக்களின் நலன் கருதி இலங்கைத் தமிழரசு கட்சியின் 8 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு, சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களிலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

​தொடர்ந்து உரையாற்றிய கோவில் போரதீவு வட்டார உறுப்பினர் ம.கோபிநாத்

கட்சியின் கொள்கைக்கு அமைவாக உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை என்றும் கைவிடப்போவதில்லை என்றும், கிராமத்தின் முன்னேற்றத்திற்காக எதிர்வரும் காலங்களில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

​பிரதேச சபைத் தவிசாளர் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் கோவில் போரதீவு வட்டாரத் தலைவர் மா.பரநிருபசிங்கம், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ம.சுகிகரன், கிராமப் பெரியார் ஐயாத்துரை, தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மதிப்புக்குரிய மகேந்திரன்  மற்றும் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கிருபைராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை