திருகோணமலை, கந்தளாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்ட தரம் 6-இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள் திடீரெனப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 6-இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு எடுத்துச் சென்று சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம் (20.07.2026)ஆம் திகதி சூரியகாந்தி விதைகள் எனத் தவறாக நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் சேர்த்துச் எடுத்துச் சென்று நண்பர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.
இதன் காரணமாகவே குறித்த மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 20 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் உட்பட மொத்தம் 22 மாணவர்கள் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் ஆமணக்கு விதைகளையே உட்கொண்டிருக்கலாம் என கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 04 பேரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கந்தளாய் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விரிவான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.