சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, 2026 ஜூலை 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி (06.07.2026 -10.07.2026) வரையிலான காலப்பகுதி “11வது தேசிய காயம் தடுப்பு வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முதலாம் நாளான இன்று(06.07.2026)ஆம் திகதி 'சாலைப் பாதுகாப்பு நாளாக' பிரகடனப்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கான விசேட சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று (06.07.2026) நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் திரு. சி. யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நடவடிக்கையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்தோடு, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து வீதியைப் பயன்படுத்திய வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வூட்டினர்.
சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களைச் செலுத்துதல்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் (Helmet) அணிவதையும், ஏனைய வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவதன் அவசியத்தையும் வலியுறுத்துதல்.
பாதசாரிகள் வீதியை பாதுகாப்பான முறையில் கடப்பது மற்றும் மஞ்சள் கோடுகளைப் பயன்படுத்துதல்.
"பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்"
வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் காயங்களைக் குறைத்து, விபத்துகளற்ற ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் பொதுமக்கள் அனைவரும் தனி நபர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இதன்போது அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.