கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று (10.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் ஜெயந்திபுர பகுதியில் இருந்து பேராறு பகுதியை நோக்கி களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் போட்டங்காட்டு சந்தியில் வைத்து கந்தளாயில் இருந்து வானல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிள்மீது ஏறிச் சென்று அருகில் உள்ள தென்னை மரத்தில் மோதி நின்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.