மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில், ஆசிரியர் ஒருவர் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​இச்சம்பவம் நேற்று (11.07.2026) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பண்டாரியாவெளியைச் சேர்ந்த 54 வயதுடைய, நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

நேற்று சனிக்கிழமை தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக அவர் சென்றிருந்தபோது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டியுள்ளது.

​அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

​உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (12.07.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

​இச்சம்பவம் குறித்து கொக்கட்டிசோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை