மட்டக்களப்பில் வண்டுகளுடன் அரிசி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு.!

வண்டுகளுடன் அரிசி விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கு, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (03.07.2026) தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

​மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், கடந்த மே மாதம் 27 ஆம் திகதி (27.05.2026) பொது சுகாதார பரிசோதகர்களான சீ.ரவிகரன் மற்றும் த.ரிஷிகோபன் ஆகியோரால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

​இதன்போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் வண்டுகள் மொய்த்திருந்த 192 கிலோகிராம் அரிசி விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த அரிசி கைப்பற்றப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

​கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்றைய தினம் (03.07.2026) ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடை உரிமையாளருக்கு 7,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.

​பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதியது பழையவை