யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த செய்திக்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தனின் புகைப்படத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தவறாகப் பிரசுரித்துள்ளது.
இச்சம்பவம் ஊடக வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ந்தது என்ன?
யாழ். கொடிகாமத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
இச்செய்தியைப் பிரசுரித்த யாழ். பத்திரிகை ஒன்று, உயிரிழந்த இளைஞரின் புகைப்படத்திற்குப் பதிலாக, ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தனின் புகைப்படத்தை இணைத்துச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
தான் உயிருடன் இருக்கும் நிலையில், விபத்தில் உயிரிழந்ததாகத் தனது படத்துடன் செய்தி வெளியானதைக் கண்டு ஊடகவியலாளர் செ. நிலாந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆசிரியர் பீடத்தின் விளக்கம்.
இத்தவறு தொடர்பில் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,
"தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தவறாகவே இப்புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு விட்டது. இதற்காக வருந்துவதுடன், இது குறித்த தெளிவுபடுத்தல் மற்றும் மறுப்புச் செய்தியை அடுத்த பதிப்பில் உடனடியாகப் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"
என அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடம் உறுதியளித்துள்ளது.