இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை குறைவடைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உற்பத்தித் திறனுக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் குடும்பங்களை கவரக்கூடிய நிதி ஊக்கத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என பிரேரணையில் வலியுறுத்தியுள்ளார்.