இலங்கையில் நிலவி வரும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய 'எல் நினோ' (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளவும், தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிசெய்யவும் பாதுகாப்பு அமைச்சு சிறப்பு சுற்றுநிரூபம் மற்றும் சட்டத் திருத்தங்களை வெளியிட்டுள்ளது.
நீர் விநியோகம் அதிகரிப்பு:-
நபர் ஒருவருக்கான தினசரி நீர் விநியோகம் 6 லீட்டரிலிருந்து 15 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
பவுசர்கள் மூலம் விநியோகம்:-
324 நீர் தாங்கி ஊர்திகள் (Water Bowsers) மூலமாகவும், தேவைப்படும் இடங்களில் இராணுவ பவுசர்கள் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் எதிர்கால மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வதற்காக தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.