பாராளுமன்றத்தில் இன்று (21.08.2026) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் கொள்வனவுக்கான மேலதிக நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
தனதுரையில், அண்மையில் மறைந்த நாட்டின் புகழ்பெற்ற மூத்த சிங்களப் பாடகியான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு தொடர்பில் பேசுகையில்,
இந்த நாட்டின் புகழ்பெற்ற சிங்கள பாடகி, எமது யுகத்தின் மிகச்சிறந்த பாடகி மாத்திரமல்ல, தன்னுடைய திறமையை எதுவாக இருந்தபோதிலும் கூட அரசியல் பழிவாங்கல்களுக்கு மத்தியிலும் நிலைத்து நின்ற ஒரு பாடகி. அவருடைய மறைவையிட்டு எங்களுடைய அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
அதேவேளை, இன்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக இதுவரையும் ஒதுக்கியிருந்த நிதிக்கு அப்பால் மேலதிகமாக 7,500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதான இந்த ஒதுக்கீட்டு முயற்சியை நாங்கள் பாராட்டுகின்ற அதேவேளை, இந்த நெல் கொள்வனவு சம்பந்தமான விவகாரத்தில் இருக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சிறிய நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் ஓர் உள்ளடக்கிய தீர்வாக இந்த முயற்சியை அரசாங்கம் செய்திருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தபோதிலும் கூட, என்னை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்தில் இருக்கிற பல களஞ்சியசாலைகள் சம்பந்தமாக சரியான விவரங்கள் அறியாமல் களஞ்சியப்படுத்தலிலும் பிரச்சினை இருப்பதாக, குறிப்பாக நெல் கொள்வனவுக்கு ஏற்கனவே இருந்த இடங்களை நான் சொல்லப்போனால் சித்தாண்டி, கரடியனாறு, புலிபாய்ந்தகல், வாழைச்சேனை, கல்லியங்காடு போன்ற இடங்களில் நிறைய இதற்கான களஞ்சியப்படுத்தல் இடங்கள் தாராளமாக இருப்பதை நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அண்மையில் நான் ரிதித்தென்னப் பிரதேசத்தில் வாகனேரி குளத்திற்கு அருகில் அமைந்துள்ள பொத்தானைக்குப் போயிருந்தபோது, அப்பகுதியில் நெல் கொள்வனவு தாராளமாக நடந்து கொண்டிருந்தது. தனியார் கம்பனிகளின் உரிமையாளர்கள் லொரிகளைக் கொண்டுவந்து நெற்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அங்கு விவசாயிகளிடத்தில் கேட்டபோது அவர்களுக்கு 100 ரூபாய்க்கு உட்பட்ட அளவிலேதான் ஒரு கிலோவைக் கொள்வனவு செய்கின்ற நிலை இருந்தது. ஆனால் இதன் மூலம் முழுமையாக இந்த பிரச்சினை தீர்க்கப்படுமா என்பது சந்தேகம்தான்.
ஏனென்றால் எவ்வளவுதான் அரச சலுகைகள் இருந்தாலும் முழு நெல் உற்பத்தியில் ஒரு 3 சதவீத அல்லது 5 சதவீத நெல்லைத்தான் கொள்வனவு செய்ய முடியும். அதன் மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் இங்கு அமைச்சர் அவர்கள் ஏற்கனவே சொன்னது போல நெல் உற்பத்தியை அதிகரிப்பது மாத்திரமல்ல உற்பத்தி குறைந்த பிரதேசங்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நவீன ஏற்பாடுகளை செய்வதும், அதற்கு ஏற்ற வசதிகளை ஏற்பாடு செய்வதும் தான் பிரதானமானது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த வாரம் முழுவதும் சுகாதாரத் துறை தொடர்பாகவும், குறிப்பாகச் தாதிய உதவியாளர்களின் சீருடை குறித்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, நமது அமைச்சர் அவர்கள் அதற்கு அமைதியாகச் செவிசாய்த்தார். அத்துடன், அதற்கான தீர்வை வழங்க உதவுவதாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், நேற்று அவர் உரையாற்றும்போது சிறிது பதற்றமடைந்தும் கலக்கமடைந்தும் காணப்பட்டதாகவே நமக்குத் தோன்றியது. ஏனெனில், மின்னல் தாக்கும்போது இரும்புத் துண்டை தூக்கி முன்னால் போடுவது போல, எப்போதும் எதிர்க்கட்சியைக் குறை கூறவே அவர் முயற்சிக்கிறார்.
குறிப்பாக, சுகாதார அமைச்சின் துறை சார்ந்த கண்காணிப்புக் குழுவின் தலைவராகக் கடமையாற்றும் டாக்டர் நிஹால் அபேசிங்க போன்ற ஒருவர், இது குறித்து ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்க முடியும். இதன் மூலம், சுகாதாரத் துறையின் தேவைகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில், முஸ்லிம் பெண்களின் மதச் சம்பிரதாயங்களுக்கு ஏற்பச் சீருடையில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு அவரால் தலையிட முடியும் என நாம் நம்புகிறோம். அவர் இதில் உரிய முறையில் தலையீடு செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் விடைபெறுகிறேன் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.