கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸவரர் ஆலயத்தில், தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில், இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக, இன்றையதினம் ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புக்களும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் அனைத்து விடயங்களிலும் போராடவேண்டிய நிலையில் உள்ளோம்.
அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள், இராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன் வருகின்ற 23 திகதி அகழ்வுகளில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தங்களது பௌத்த அடையாளங்கள் இருப்பதாக கூறி பௌத்த ஆலயங்களை நிலைநாட்டுவகாகவும், பரம்பெருக்களாக நாங்கள் ஆண்டு இருக்கின்றோம் என்பதை நிறுவிப்பதற்காக தங்களது விருப்பப்படி தனியே பௌத்தத்தை அடிப்படையாக கொண்ட குழுவை நியமித்து உள்ளனர்.
பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் இந்த ஆலயத்தினை ஆராய்ச்சி செய்து பார்க்க இவர்கள் நிற்கின்றார்கள். இந்த இடத்தினை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர் அவர்களே இவ் ஆய்வினை செய்ய பௌத்த குருமாருடன் ஆர்வமாக உள்ளனர்.
இவற்றை தடுப்பதற்கு நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தடை உத்தரவை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
எங்களுடைய பிரதேசங்களை மற்றும் எங்களுடைய தெய்வங்கள் இருக்கின்ற இடங்களை பௌத்த ஆலயங்களாக அடையாளங்களாக உருவாக்கி அதனை நிரூபித்து இந்த பிரதேசம் தங்களுடையது என்றும் இந்த பூமி உங்களுடையது அல்ல - எங்களுடையது என வரலாற்று ஆவணங்களை தயாரிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இதற்கு நாங்கள் இடம் கொடுக்காது எமது மண்ணை நாங்கள் காப்பாற்ற சட்டநடவடிக்கை மற்றும் போராட்டங்களை நடாத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.