முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாறு பகுதியில், பருவத் தொழிலுக்கு வருகை தரும் தென் பகுதி மீனவர்களால், கொரோனா தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நாயாற்றுப் பகுதியில், அதிகளவான தென் பகுதி கடற்தொழிலாளர்கள், மிகவும் நெருக்கமாக, சுகாதார அறிவித்தல்களை பேணாத நிலையில், எதுவித சுகாதார கட்டுப்பாடுகளும் இன்றி குடியிருக்கின்றனர்.
அவர்களில் 28 பேருக்கு, கடந்த 29 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, வெளியான அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று, தொற்றாளர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, சுகாதர பிரிவினர் பேருந்தை கொண்டு சென்ற போது, அவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டத்தை பயன்படுத்தி, சுகாதார பிரிவின் கட்டளைக்கு அமைவாக, நீண்ட நேரத்தின் பின்னர், 5 பேரும், கொரோனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று, அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்த போதும், அதற்கும் குறித்த பகுதி மக்கள் ஒத்துழைக்கவில்லை.
அதனால், பல்வேறு சிரமங்களின் மத்தியில், இன்று 74 பேருக்கு மாத்திரமே, பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடிந்ததாக, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
பருவ கால கடற்தொழிலுக்காக, சுமார் 700 வரையான, சிறுவர்கள், பெண்கள், கற்பிணிகள் என, அனைவரும் வருகை தந்து, மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றார்கள்.
அவர்கள் தொடர்பான எந்தவித பதிவுகளும் இங்கு இல்லை.
அவர்களை இனம்காண்பது, பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது என, அனைத்து விடயங்களிலும் பாரிய சவால் உள்ளது.
இவ்வாறு பதிவுகள் இன்றி வாழ்பவர்களை, நாம் இனம்காண முடியாது.
இது ஒரு பாரிய சுகாதார பிரச்சினை.
இங்கு கர்ப்பவதிகள் உள்ளார்கள், சிறுவர்கள் உள்ளார்கள்.
உரிய சுகாதார வசதிகள் இல்லை.
பதிவுகள் இல்லை.
இது எமக்கு ஒரு பாரிய சவால்.
இவ்வாறு எப்படி அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, எமக்கு பாரிய சிக்கல் உள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த பகுதியில் இருந்து, கடந்த 28 ஆம் திகதி, பேருந்து ஒன்றின் ஊடாக, 30 பேர், முடக்கப்பட்ட புத்தளம் மாவடடத்தில் உள்ள அவர்களின் ஊருக்கு சென்றுள்ளார்கள்.
அவர்கள், மீண்டும் இந்த இடத்திற்கு வர அனுமதிக்கப்பட கூடாது என்பதை, நாங்கள் தெரிவித்துக் கொள்வதுடன், நாயாற்று பகுதியில் வந்து இருக்கும் மக்கள் தொடர்பில், எந்தவித பதிவுகளும் எவரிடமும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில், முல்லைத்தீவிற்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தாதவாறு, அதிகாரிகள் செயற்பட வேண்டும்.
இவ்வாறான பாரதூரமான நிலையில், கொரோனா தடுப்பு செயலணிக்கு, குறித்த பகுதியை, மறு அறிவித்தல் வரை முடக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.உமாசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாயாறு பகுதியில், கடற்தொழிலுக்காக, எத்தனை பேர் வருகை தந்துள்ளார்கள் என்ற விபரங்கள் எதுவும், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடமும் இல்லை என தெரியவந்துள்ளது.