இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள், இன்று 05-07-2021ஆம் திகதி காலை நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டடத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிருசாந்த கீகனகே, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுசில்சாந்த, செயலாளர் அருணசாந்த, உறுப்பினர் சத்தியராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில், நுவரெலியா நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை ஒரு மணித்தியாலம் மூடி ஒத்துழைப்பு வழங்கினர்.
இதன்போது கருத்துரைத்த விவசாயிகள்,
சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்குக் கொண்டுவந்து அதனை சேதன பசளை எனக் கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
விவசாயிகளை இல்லாமல்செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே அரசாங்கத்தின் இந்த திட்டமிடப்பட்ட சதியாகும்.
இதற்கு விவசாயிகள் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டார்கள்
இன்று இலங்கையில் இரசாயன உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
விவசாயத்தை மாத்திரமே நம்பியிருக்கின்ற இந்த விவசாயிகளை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
தங்களுடைய முழுமையான வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களைக் கண்டு கொள்வதாக இல்லை.
நுவரெலியாவில் விவசாயம் பாதிக்கப்பட்டால் அதனை நம்பியிருக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நாங்கள் ஒருபோதும் சேதன பசளைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதனை நடைமுறைபடுத்திய விதம் பிழையானது என்பதே எங்களுடைய கருத்தாகும். எதனையும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.
சரியான திட்டமிடல் இல்லாமல் இந்தத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைபடுத்துவதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றைய இந்த கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக முடங்கிப்போயிருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறான புதிய நடைமுறைகள் ஏற்புடையதல்ல.
எனவே இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு அதனை சரியான திட்டமிடலுடன் நடைமுறைபடுத்தினால் மாத்திரமே இதனை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.