மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதிக்கப்படவுள்ளதுடன், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆவணித் திருவிழா தொடர்பாகவும், ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, பல்வேறு விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு திருவிழா தொடர்பாகவும், முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில், இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் மாத்திரம், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில், திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதார துறையின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உரிய திணைக்களங்களின் உதவியுடன், திருத்தலத்திற்கு செல்லும் மக்களின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
நீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற தேவைகளை, உரிய திணைக்களங்களுடன் இணைந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, சுகாதார செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அடுத்த கூட்டங்களில் தீர்மானங்களை முன்வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


