யாருக்கும் வாக்களியுங்கள், ஆனால் கட்டாயம் வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்



வடக்கு, கிழக்கில் உள்ள 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் இடம்பிடிக்கும் வண்ணம் சம்பந்தப்பட்ட கிராம சேவை அலுவலர்களை அணுகி உறுதிப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களில் விரும்பிய கட்சிக்கு, விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் தகுதியைப் பெறுமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பாக தற்போது கிராமசேவை அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்,

தற்போது 2021ஆம் ஆண்டுக்காக தேருநர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய் காரணமாகக் கிராமசேவை அலுவலர்கள் வீடுவீடாக சென்று இம்முறை படிவங்களை விநியோகிக்க மாட்டார்கள்.
ஆனால் 2020ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைச் சரிபார்த்து புதிதாக 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவரும் தமது அடையாள அட்டைகளைக் காட்டி பிறந்த திகதியைக் குறிப்பிட்டு வாக்காளராகப் பதியும் படி வேண்டுகின்றோம்.

இதேவேளை முதலில் 2020ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் உங்களது பெயர் இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
2020ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் இல்லாவிட்டால் 2021/ER படிவத்தினை பூர்த்தி செய்து நீங்கள் சாதாரணமாக வதிகின்ற பிரிவு கிராம சேவையாளரிடம் கையளித்து உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.
பெயர் இருக்கின்றது, ஆனால் பதிவில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனினும் உங்கள் பிரிவு கிராம அலுவலரைத் தொடர்பு கொண்டு அதை திருத்தம் மேற்கொள்ள முடியும்.

பெயர் இருக்கின்றது, அதில் மாற்றம் எதுவும் அவசியமற்றது. எனில் நீங்கள் இம்முறை எதுவும் செய்யவேண்டியதில்லை. உங்கள் பெயர் 2021ஆம் ஆண்டு இடாப்பில் வழமை போல் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான சகல 2021/ER படிவத்தினை நீங்கள் உங்கள் பிரிவு கிராம அலுவலரிடம், பிரதேச செயலகத்தில் பெறலாம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் தரவிறக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது.
இருந்தபோதும் இந்த விடயம், வாய்ப்புகள் சாதாரண மக்களுக்குச் சென்றடைவது குறைவு. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்த வேண்டும்.
2021 ஜுன் 1 ஆம் திகதிக்கு முன் 18 வயது பூர்த்தியடைந்தவர்களையும், 2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் தமது பெயரைப் பதியத் தவறியவர்களையும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், விடயத்தைத் தெரியப்படுத்திப் பதிவு செய்ய ஊக்குவியுங்கள் இம்முறை பதிவின் போது புதிய முறை பின்பற்றப்படுகின்றது.
வீடு வீடாக பி.சி. படிவம் வழங்கப்பட்டு அதனை மீளவும் பெற்றுப் பதியும் முறை இம்முறை இருக்காது. அதற்குப் பதிலாக 2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பினை அடிப்படையாக வைத்து அதில் சேர்க்க வேண்டிய பெயர்களைச் சேர்க்கவும், நீக்க வேண்டிய பெயர்களை நீக்கவும் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு பொறுப்பு வாய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற காரணத்தால் இந்த விடயங்களை எமது மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே விபரமாகத் தெரிவித்துள்ளேன்.

தேர்தல்கள் பல வரும், போகும். யாரும் யாருக்கும் எந்த கட்சிக்கும் வாக்களிக்கலாம். அது ஜனநாயக உரிமை. ஆனால் கட்டாயம் வாக்காளர்களாக இணைவது ஒவ்வொருவரின் உரிமை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை