சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!



சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின்   கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் அனுமதி கோரி அரசினால் முன்வைக்கப்பட்ட  தீர்மானம் வெள்ளிக்கிழமை (28)  மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது   95மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 மாத கால நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு கடந்த மார்ச் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில்   சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென  முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான 3 நாள் விவாதத்தை  கடந்த  புதன்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் நேற்று 3ஆவது நாள் விவாதம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது  தீர்மானம் மீது  காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று மாலை  6. 20 மணியளவில் முடிவற்றது. 

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தீர்மானத்தை சபை அனுமதிக்கின்றதா என கேட்டபோது, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வாக்கெடுப்பைக்கோரினார். 

இதன்போது சபாநாயகர் கோரம் மணியை ஒலிக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து  இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில்  தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக  25 வாக்குகளும்  அளிக்கப்பட்ட நிலையில்  95 மேலதிக வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து பாராளுமன்றத்தில் எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான அனுர பிரியதரஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க,சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் வாக்களித்த நிலையில் 

தீர்மானத்திற்கு எதிராக  டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச தலைமையிலான அணி, அனுரகுமார திஸாநாய்க்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் வாக்களித்தன.

பெளசி ஆதரவாக வாக்களிப்பு

இதேவேளை  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஏ.எச்.ம்.பெளசி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.,அத்துடன்  இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி.தலைமையிலான   தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியன வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன . வாக்களிப்பில் மொ்ததமாக 79பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை