மாணவிக்கு தெய்வமாய் உதவிக் கரம் கொடுத்த - பொலிஸ் அதிகாரி !



கல்விப் பொதுத் தராதர பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உடனடியாக உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கான பரீட்சை நிலையமாக செயற்படும் மொரகஹஹேன கோனாபொல பழனொறுவ மகா வித்தியாலயத்தின் பிரதான வாயிலின் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் (41013) ஏ. குலரத்னவே இந்த பாராட்டுக்கு உரியவராவார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று காலை பரீட்சை நிலைய வாயிலில் கடமையிலிருந்தபோது மாணவி ஒருவர் கண்களில் கண்ணீர் வழிய பதற்றத்தோடு வந்துள்ளார். பொலிஸ் அதிகாரி அம்மாணவியிடம் விசாரித்த போது. எனது அட்மிஷனை (பரீட்சை அனுமதி அட்டை) கொண்டு வர மறந்துவிட்டேன். இன்னும் சில நிமிடங்களில் பரீட்சை ஆரம்பமாகிவிடும். என்னால் பரீட்சை எழுத முடியாது என கூறி அழ ஆரம்பித்துள்ளாள்.

பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன தனது கைக்கடிகாரத்தைப் பார்த்த போது , நேரம் காலை 8 மணி 22 நிமிடங்கள். பரீட்சை தொடங்க இன்னும் 8 நிமிடங்கள் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்தார்.

ஒவ்வொரு நிமிடமும் மதிப்புக்குரியது என்பதை நன்கு புரிந்து கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன, பாடசாலை பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ ஜீப்பில் வந்திருந்த பொலிஸ் அதிகாரி துசித விக்கிரமரத்னவிடம் விரைந்து சென்று மாணவிக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை தெரிவித்தார்.

மறுபேச்சின்றி பொலிஸ் அதிகாரி துசித விக்கிரமரத்ன மாணவிக்கு உதவ அனுமதியளித்ததால், மாணவியை தனது பொலிஸ் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு நான்கு கிலோமீற்றர் தூரத்தில் நாகாஸ் சந்தியில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் அழைத்துச் சென்றார் சார்ஜன்ட் குலரத்ன. .

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பரீட்சை நிலைய பொறுப்பாளரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று பரீட்சைக்கான அனுமதி அட்டையை கொண்டுவருவதாக தெரிவித்தார்.

பொலிஸ் சார்ஜன்ட் குலரத்னவின் உதவியால் மாணவி குறித்த நேரத்திற்கு வந்து பரீட்சைக்கு தடையின்றி முகம் கொடுக்க முடிந்தது
சில நிமிடங்களிலேயே நடந்த இந்த நற்செயலை அறிந்து கொண்ட பெற்றோர்கள், பொலிஸ் அதிகாரியை பாராட்டியதுடன், தேவையான அனுமதி வழங்கிய நிலைய பொறுப்பாளருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

புதியது பழையவை