மட்டக்களப்பில் தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -களேபரமான தனியார் பஸ் நிலையம்



மட்டக்களப்பு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கையினை முன்வைத்து முன்னெடுத்துவந்த போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனம் வழங்கிய உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது சாணக்கியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தனியார் பஸ் ஊழியர்களினால் தாக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று காலை முதல் மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்தில் தமது பஸ்களை நிறுத்தி இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அண்மையில் விபத்தினை ஏற்படுத்தி 11பேரின் உயிர்களை பலியெடுத்த பஸ் சேவையானது முறையான அனுமதிகளைப்பெறாமல் தொடர்ச்சியாக இயங்கிவருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ{க்கும் தனியார் பஸ{க்கும் இடையில்சேவை ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தி தருமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வாழைச்சேனை தொடக்கம் கல்முனை வரையில் சேவையிலீடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்,பஸ் உரிமையாளாகள் கலந்துகொண்டனர்.

அண்மையில் விபத்தினை மேற்கொண் பஸ் சேவையானது நான்கு அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு பத்து பஸ்களை சேவையில் ஈடுபட்டுத்துவதாகவும் அத்துடன் அனுமதி பத்திரத்திற்கு மாறான போக்குவரத்துசேவைகளை முன்னெடுப்பதாகவும் இதன்காரணமாக குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் பாதிக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு பிரதான தனியார் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்திவைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வைத்திருந்தனர்.

இதன்போது போராட்டம் நடைபெறும் இடத்திற்குவருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.அத்துடன் தனியார் பஸ் நேரக்காப்பாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகளுடனும் கலந்துரையாடியதுடன் அப்பகுதியில் சேவையில் ஈடுபட்ட மன்னம்பிட்டி பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய பஸ்சேவையின் பஸ் ஒன்றின் அனுமதிப்பத்திரத்தினையும் பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பில் பொலிஸ் மற்றும் தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தனியார் பஸ் சேவையில் ஈடுபடுபவர்களுடனும் கலந்துரையாடினார்.

குறித்த பஸ்ஸானது கடந்த எட்டு வருடமாக முறையான அனுமதிகளைப்பெறாமல் சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் குறித்த பஸ் விபத்துகளை ஏற்படுத்தியது குறித்தும் இதன்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களிடம் கருத்துகள் தெரிவித்திருக்கும்போது அங்குவந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கிருந்த பஸ் சாரதிகள்,உரிமையாளர்களினால் குறித்த நபர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டதுடன் அவர்கள் மீது தாக்குதலும் நடாத்தப்பட்டதனால் அங்கு பதற்ற நிலைமையேற்பட்டது.

இதன்போது அங்கிருந்த பொலிஸாரும் ஏனைய தனியார் பஸ் ஊழியர்களும் குறித்த நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கும் யுவநாதன் என்பவர் தனியார் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளராகயிருந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்காமல் இடளித்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தனியார் பஸ் நடத்துபவர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் இவற்றினை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சருடன் பேசுதாகவும் தெரிவித்தார்.



புதியது பழையவை