இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.
இதனடிப்படையில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனையில் மும்முரமாக ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வினை கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவுப்பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் முன்னெடுத்துள்ளார்.
இதன்படி 157வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம்.ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல் இன்று (27-08-2023) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதன் போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி மாலை 4 மணியளவில் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உதவிப்பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.