ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: விசேட விசாரணைக் குழுவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து!




“ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இதனை நேற்றைய தினம்(13-12-2023) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“ இந்த ஆண்டு மார்ச் 21,செப்டெம்பர் 09,ஒக்டோபர் 04,ஒக்டோபர் 18,நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இருபத்தேழு இரண்டின் கீழ் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன்.


ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்திலாவது இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.


காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஹென்ரி பேதிரிஸ் படுகொலை மிலேட்சத்தனமானது.



ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, ரிச்சட் சொய்சா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ்,மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ்,பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.


காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் செலுத்த வேண்டும்”என்றார்
புதியது பழையவை