சீதா அம்மன் கோவில் கும்பாபிஸேகத்துக்கு இந்தியாவிலிருந்து புனித நதி நீர்!



இலங்கையின் நுவரேலிய சீத்தா- எலியவில் அமைந்துள்ள சீதை அம்மன் கோவிலின் கும்பாபிசேகத்துக்காக இந்தியா, சரயு நதியில் இருந்து புனித நீரை இலங்கைக்கு அனுப்புகிறது.
சீதை அம்மா கோவில் கும்பாபிசேகம் மே 19ம் திகதி நடைபெறவுள்ளது.


சீதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சீதா அம்மா கோவிலின் கும்பாபிசேக விழாவிற்கு புனித சரயு நதி நீரை இலங்கைக்கு அனுப்பும் பணியை இந்தியா ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதச் சடங்குகளுக்கும், கோவிலில் சீதா தேவியின் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கும் சரயு நதி நீரை கோரி, உத்தரப் பிரதேச அரசுக்கு இலங்கைப் பிரதிநிதிகள் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அரசின் உத்தரவின்படி, புனித நீரைக் கொண்டு செல்லும் பொறுப்பு இந்திய சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அயோத்தி தீர்த்த விகாஸ் பரிசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஸ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இது அனைத்து சனாதனிகளுக்கும் பெருமைக்குரிய விடயம் என்று அயோத்தி தீர்த்த விகாஸ் பரிசத், அயோத்தி தீர்த்த விகாஸ் குறிப்பிட்டுள்ளது.

சீதாதேவி இலங்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டார்.
எனினும் இன்று அதே இலங்கையில் ஒரு பிரமாண்டமான கோவில் கட்டப்படுவது மகிழ்ச்சிக்குரியது என்றும் அயோத்தி தீர்த்த விகாஸ் பரிசத் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை