ஈரான் ஜனாதிபதியின் மரணம் - மட்டக்களப்பில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி



ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் காரணமாக  இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்  மட்டக்களப்பிலுள்ள அரச திணைக்களங்களில்  இலங்கையின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இன்றைய தினம்(21-05-2024) தேசிய துக்க தினமாக அறிவித்து தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவித்திருந்தது.



தேசிய துக்க தினம்

அதனடிப்படையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இன்றைய தினம் (21-05-2024) தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.


ஈரானின் (Iran) வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-05-2024) ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஈரான் ஜனாதிபதி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை