இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு!



நாடு முழுவதிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. ஆனபடியினால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 150 மில்லிமீற்றர் வரையிலான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் தென் மாகாணத்திலும்    மணித்தியாலத்திற்கு சுமார் 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார்  30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். 

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சிலஇடங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

மன்னார்  தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50  கிலோமீற்றர் ஆக அதிகரித்தும் காணப்படும். 

கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

மன்னார் தொடக்கம் கொழும்பு வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.
புதியது பழையவை