மட்டக்களப்பில் சிறுவர்களை தலைகீழாக கட்டி சித்திரவதை செய்த தாய் கைது!



மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சதாம் உசைன் கிராமத்தில் இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தடியால் அடித்து சித்திவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (28-05-2024) இடம்பெற்றுள்ளதாகவும் துன்புறுத்தப்பட்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த தாயார் தனது கணவனை பிரிந்து 11 மற்றும் இரண்டரை வயது மகன்களுடன் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.


தந்தையின் நடவடிக்கை
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த மகன் புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு தடியால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.


அதேவேளை, அவர் இரண்டாவது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில், சிறுவனை தரமுடியாதது என அவர் மறுத்துள்ளார்.


ஆரம்ப கட்ட விசாரணை
இதனையடுத்து குறித்த தந்தையார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிஸார் குறித்த தாயாரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்த போது, இரு சிறுவர்களை துன்புறத்தும் போது எடுக்கப்பட்ட காணொளிகளை கண்டுபிடித்துள்ளனர்.


இதனையடுத்து, அவரை கைது செய்ததுடன் இரு குழந்தைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த தாயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை