யாழ்ப்பாணத்தில் நேற்று(20-07-2025) இடம்பெற்ற கலந்துரையாடலில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவராக
யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக சிவானந்தன் ஜெனிற்றாவும் உப தலைவராக வல்லிபுரம் அமலநாயகியும் உப செயலாளராக செபஸ்டியாம் தேவியும் பொருளாளராக கதிர்காமநாதன் கோகிலவாணியும்
இதே போன்று புதிய நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாக தெரிவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,
எமது சங்கம் 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை நேர்த்தியாக வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இயங்கி வருகிறது.
இரண்டு வருட காலமாக தனி நபர்கள் பிரச்சனைகளால் ஒருவர் பிரிந்து சென்று அதனை மழுங்கடிக்கும் நோக்கோடு செயற்படுகிறார்.
எனினும் இந்த அமைப்பானது எப்பொழுதும் உறவுகளுக்கான ஒரு அமைப்பாக தான் இருக்கும். ஒரு சிலரது செயற்பாடுகளால் இதனை சிதைக்க முடியாது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் என்பது உறவுகளைத் தேடுகின்ற நீதி கோருகின்ற ஒரு அமைப்பாகவே எப்போதும் பயணிக்கும்.
இதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம். ஆனாலும் இந்த அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் எவருப் உரிமை கோரமுடியாது.
ஆகையினால் ஒரு கட்டமைப்பாக சிறந்த முறையில் செயற்பட்டு வருகிற இந்த அமைப்பானது எமது உறவுகளைத் தேடுகின்ற சர்வதேச நீதியை கோருகின்ற இனத்திற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முழு வீச்சோடு அனைவரது ஒத்துழைப்புடனும் முன்னெடுத்துச் செல்லும் என்றனர்.