மஹியங்கனை, கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் தவறி விழுந்த காதலனை காப்பாற்றச் சென்ற காதலி நீரில் மூழ்கி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20-07-2025)ஆம் திகதி மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கால்வாயில் நீர் ஓட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், குறித்த இருவரும் கால்வாய் ஓரமாக நடந்துச் சென்றுள்ளனர் எனவும் அப்போது குறித்த இளைஞன் எதிர்பாராத விதமாக கால்வாயிக்குள் திடீரென தவறி விழுந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நேரத்தில், அவரது காதலி அவரைக் காப்பாற்ற முயற்சித்த வேளை அவரும் கால்வாய்க்குள் விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அப்பகுதி ஊடாக சென்ற தம்பதியினர் விரைந்து செயற்பட்டு கால்வாய்க்குள் குதித்து இளைஞனைக் காப்பாற்றியுள்ளனர் எனவும், ஆனால் அவர்களால் யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயது மாணவியே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் இறக்கிவிடுவதற்காகச் சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.