மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடு நேற்று (05.08.2025) இரவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட நிலையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபரி ஒருவரிடம் இருந்து 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த பெண்ணை வாழைச்சேனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் நேற்று இரவு 8.00 மணியளவில் பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ளு போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
குறித்த நடவடிக்கையில் 45 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.