மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் (11.11.2025) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும்(24ம.11.2025)ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவரை கடந்த சனிக்கிழமை (08.11.2025) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்தனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த தினத்தில் ஆள் அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இடம்பெறும் என கட்டளையிட்டு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் அடையாளம் காண்பித்ததையடுத்து நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்


அதேவேளை இவ்வாறு கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல் நடித்து வந்துள்ளார். இவர் உயர்கல்வியை விஞ்ஞான பாடம் கற்றுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து வந்த அவர் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதேவேளை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை தயாரித்து கொடுத்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை நீதவான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை