உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவினரால் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (26.02.2026)ஆம் திகதி பொறுகாமம் சமூர்த்தி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களான எஸ்.விக்கினேஸ்வரராஜா, எஸ்.ஜீவிதன் ஆகியோர் கலந்து கொண்டு புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கினர்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் அதனைப் பூரணமாகக் குணப்படுத்த முடியும் என்பது குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
முறையற்ற உணவுப் பழக்கம், புகைத்தல் மற்றும் மதுபானப் பாவனை போன்றவற்றால் ஏற்படும் புற்றுநோய் அபாயங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பாதுகாப்பு இரசாயனங்கள் (Preservatives) புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த விழிப்புணர்வுச் செய்திகளைக் கிராமிய மட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு செல்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.