இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனும், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜனித் மதுசங்க (பொடி லெசி) இன்று (27.02.2026)ஆம் திகதி அதிகாலை பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
மும்பையிலிருந்து இன்று அதிகாலை 5.56 மணியளவில் வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-142 என்ற விமானத்தின் ஊடாக அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இரண்டு அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து அவரைப் பொறுப்பேற்று அழைத்து வந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதை அடுத்து, ஒரு சட்டத்தரணியின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய பொடி லெசி, பின்னர் தலைமறைவாகி கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
நீண்ட நாட்களாக இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பில் இருந்த அவர், 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் இவர் மீது
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்.
பல்வேறு திட்டமிட்ட கொலைச் சம்பவங்கள்.
அரச அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தமை.
போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இவரிடம், இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறியும் நோக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.