வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் புறக்கணிப்பு.!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (26.02.2026) நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் போது நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தின் நடைமுறைகள் மொழிபெயர்ப்பின்றித் தொடர்ச்சியாகச் சிங்கள மொழியில் இடம்பெற்று வந்ததைக் கண்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் சீற்றமடைந்தார்.


ஆசனத்தில் இருந்து எழுந்த அவர், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்கள் என்பதை ரவிகரன் எம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார்.


"தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மாவட்டத்தில், மொழிபெயர்ப்பின்றி நீண்டநேரமாகச் சிங்கள மொழியில் மட்டும் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்த அவர், உடனடியாகத் தமிழ் மொழிமூலமான மொழிபெயர்ப்பை வழங்குமாறு கோரினார்.

துரைராசா ரவிகரன் எம்பியின் கோரிக்கையைத் தொடர்ந்து, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, இரு மொழிகளிலும் கலந்துரையாடல்கள் சீராக முன்னெடுக்கப்பட்டன.
புதியது பழையவை