திருகோணமலை கந்தளாய், பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (03.04.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நேற்று முற்பகல் 11:30 மணியளவில் நான்கு இளைஞர்கள் குறித்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் வழக்கமாக ஆற்றில் நீர் அதிகமாக இருக்கும் போது, ஒரு இடத்தில் குளிக்க ஆரம்பித்து நீரோட்டத்துடன் மிதந்து சென்று, அதற்கு அடுத்ததாக உள்ள பகுதியில் கரையேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேற்றைய தினமும் அவ்வாறே குளித்த நிலையில், அவருடன் வந்த நண்பர்கள் குறித்த இளைஞன் அடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கருதி, அவரது உடைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், பள்ளிவாசல் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிய நண்பர்கள், குறித்த இளைஞன் வீடு திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பிற்பகல் இரண்டு மணியளவில் தேடத் தொடங்கியுள்ளனர். இதன்போது, அவர் குளித்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் நீருக்கு அடியில் சிக்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.