இலங்கையின் வடகிழக்குத் திசையில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் அடுத்துவரும் சில தினங்களில் வட திசையை அண்மித்து நகர்ந்து செல்லும். இதன் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதிலும் தற்பொழுது நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ , மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
இலங்கையின் வடகிழக்குத் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. ஆனபடியினால் எதிர்வரும் நாட்களில் நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.