ஆரையம்பதி ஒல்லிக்குளத்தில் வேன் தீப்பற்றி எரிந்து நாசம்- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.!

​மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் இன்று (10.05.2026)மாலை பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

​வெளிநாட்டிலிருந்து இலங்கை வருகை தந்த ஒரு குழுவினர், கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி குறித்த வேனில் பயணித்துள்ளனர். 

இன்று (10.05.2026)மாலை ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியை வேன் கடக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் தீ பரவியுள்ளது.

​சிறிது நேரத்திலேயே தீ வேன் முழுவதும் பரவி, வாகனம் திகுதிகுவென எரியத் தொடங்கியுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

​வேன் தீப்பற்றியதை அவதானித்த பயணிகள் உடனடியாக வாகனத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனால் வேனில் பயணித்த அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

​தீப்பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை