நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கண்டித்து நேற்று (15.08.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பின்வருமாறு சுட்டிக்காட்டினார்:
சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் அமைப்புகள், எதிர்க்கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் பௌத்த மகாபீடங்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், அரசாங்கம் பிடிவாதமாக இந்த பிரேரணையை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கம் தங்களின் சுய தேவைகளுக்காகவே இந்த பிரேரணையைக் கொண்டு வருவதாகவும், இது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். இது தேவையற்றது மற்றும் தவறானது என்பதில் தாம் உடன்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதும் இதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு நேரடியாகக் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இது நாட்டிற்கு அவசியமானதொன்றல்ல; தனக்குத் தேவையானது என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி இதில் பிடிவாதமாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை எடுத்த இத்தீர்மானம் தவறானது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நீதியரசர்களுக்குப் பதவி நீடிப்பு வழங்குவதற்கான இம்மாற்றங்கள் நீதித்துறை சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும் என்றார். எனவே, அரசு இத்தீர்மானத்தைத் தவிர்ப்பது நல்லது என்றும், இதை அரசியல் சவாலாகப் பார்க்காமல் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சாதகமான தீர்மானமாக ஏற்றுப் பின்வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.